A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, August 7, 2015

அத்தனைக்கும் ஆசைப்படவா?



ஆசைகளின் தொடர்ச்சி
நீள் பாதையாய் நீண்டுபோய்க் கிடக்கிறது
வெகுதூரம் நடந்தும் இளைப்பாற மனமின்றி
கால்கள் நகர முனைகிறது

முடிவில்லா ஆசைகளின்
முற்றுப்பெறா பயணத்தில்
தொலைந்து போகிறது வாழ்வெனும் மகிமை
எல்லோர் வாழ்வும் கூண்டுக்கிளியாய் ஆசைச்சிறையில்

உச்சரிக்கப்படும் ஒவ்வொரு சொல்லிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
மனிதனின் ஆழ்மன ஆசைகள்
கீழ்த்தரம் மேல்த்தரம் எனும் பாகுபாடின்றி

குருதி குடிக்கும் வெறியோடு
நரகபலிக்காய் காத்திருந்த மனித மனங்கள்
போட்ட வேசங்கள் கூக்குரலாய் தெருவெல்லாம்
கைகொட்டிச் சிரிக்கிறது மனச்சாட்சி எனும் அறிவு

முடிவிலியாய் காமமும்
அறிவிலியாய் ஆணவமும்
அடிமனதின் ஆயிரம் வன்மங்களாய்
பரிகசித்துச் சிரிக்கிறது படைத்துவிட்ட இயற்கை

நாகரீகம் போட்ட வேலிக்குள்
நசியுண்டுபோய் உயிர் வாழத் துடிக்கிறது காதல்
காமச் சிறகுகளின் விசையில் ஒட்டிக்கொண்டு
குற்றுயிராய் வாழ்கிறது காதல்

புசிக்கப்படா காமம் காதலெனும் முகமூடியுடன்
கட்டுப்படா ஆணவம் அதிகாரமெனும் அகராதியுடன்
ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப்படைத்துவிட்டு
அடங்கிப் போகிறது சவப்பெட்டிக்குள்

விபச்சார விடுதிக் கதவில் சாய்ந்து நின்றபெண்ணும்
சமூகத்தால் பத்தினி பட்டம் பெற்ற பவித்திரப் பெண்ணும்
பாவம் சபித்தபடியேதான் விடைபெற்றுப் போகிறார்கள்
சமூகச் சிறையின் கம்பிகளை உடைக்க மீள்பிறப்பெடுப்பதாக

மானுடக் காதலையும் மனித விடுதலையையும்
நேசித்த மகத்தான மனிதன் ஒருவன்
குறுந்தெருவில் முடியைப் பிய்த்து எதையோ பேசியபடி
நீண்டு நடந்து தொலைக்கிறான் வழிப்போக்கனாய்

வாழ்வின் முடிச்சுக்களை
ஒவ்வொன்றாய் அவிழ்க்க அவிழ்க்க
மேலும் இரகசியப் பூட்டுக்களால் 
இறுகிப் போகிறது வாழ்க்கை

வலி சுமந்து சுமந்து பழகிப் போனது மனசு
விடைபெறும் நேரத்திலும் விடைபெறா அல்ப ஆசைகள் இன்னும் பாக்கியாய்
மானுடத் தேடலற்று வாழ்வின் மகிமை தொலைத்து
தேசாந்திரியாய் சுற்றி அலைகிறது மனமும் அறிவுகெட்டு

நன்றி
நட்புடன்,

அ.பகீரதன்

Monday, July 27, 2015

அப்துல் கலாம்!



அப்துல் கலாம்
வெறும் விஞ்ஞானியின் பெயரல்ல
”முயற்சி திருவினையாக்கும்”
”ஒழுக்கம் உயர்வு தரும்” என்பதின் அடையாளம்

நாங்கள் ஏற்றிய பட்டம்
நூலளவு மட்டுமே பறந்தது
இவர் இராமேஸ்வரத்தில் ஏற்றிய பட்டம்
மட்டும் எப்படி சந்திரன் வரை உயர்ந்தது?

நீ மேலே செலுத்தியது
ஏவுகணைகளை மட்டுமல்ல
ஏழையின் கனவுகளையும் தான்

உந்தன் வியர்வைத்துளிகளில்
கட்டியெழுப்பட்டது துணைக்கண்டத்தின் அரண்கள் அல்ல
ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும்
2020 கனவுகளும்தான்

முத்தான உன் அறிவுரை எல்லாம்
எங்கள் முள்வீதிகளில்
விரிக்கப்பட்ட கம்பளங்கள்

பாரத ரத்னா
உனக்கு வழங்கப்பட்ட கௌரவம் அல்ல
ஏழை மாணவனின் நம்பிக்கைப் பதக்கம்

நாசாவில்…
ஐநாவில்….
தமிழினத்திற்கு பெருமை சேர்த்தவன்
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” உரக்கச் சொன்னவன்

சி.வி.ராமன்
ஸ்ரீநிவாச இராமனுஜன்
இவர்களிற்கு நீ இளவல்
ஏழைகளை நேசித்ததால் எமக்கு இறைவன்

காந்தியின் கிராம சுயராஜ்யம்
நேருவின் இரும்பு சாம்ராஜ்யம்
இரண்டுக்கும் இயன்றளவு உழைத்தவர்
இந்திரா கையால் பெருமை பெற்றவர்

*****
காரியமாற்ற
தன் வல்லமையையோடு
கடவுளின் வல்லமையும்
தேவை என்று உரக்கச் சொன்னவன்
*****
 மும்மலங்களையும் துறக்க முயன்றவர்
மும்மதங்களையும் இணைத்து நடந்தவர்
முக்காலமும் உணர்ந்தவர்
எதிர்காலம் பற்றி மட்டுமே பேசியவர்
*****
காந்தி பாதி ஜின்னா பாதி
இராமர் பாதி நபிகள் பாதி
இப்படியாய் உருவாகாமல்
இரண்டையும் உள்வாங்கிய முழுமதி
*****
தர்மநெறி கொண்ட தந்தை
ஈகைக்குணம் கொண்ட தாய்
அக்காவின் கணவர் ஜலாலுதீன்
இளமையில் இவரை சரியாய் வழிநடத்தியவர்கள்
*****
கிராமத்தில் பிறந்து
சாதாரண வளர்ப்பில் வளர்ந்து
உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர்
நல்ல மனிதநேயமிக்க தலைவர்.

அக்னிச் சிறகுகள் எனும் உந்தன் சுயசரிதத்தை முத்தமிட்டபடி உன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

நன்றி

அன்புடன் அ.பகீரதன்

Sunday, July 26, 2015

விசுவநாதன் எங்கள் இசைநாதன்



எங்கள் விசுவநாதன்
இசைத் தாயின் விசுவாசநாதன்
எங்களை ஆட்டி வைக்கவே அவனைக்
கைப்பிடித்து கூட்டி வந்தாள் இப்பூமிக்கு

பாலக் காட்டில் பிறந்தவன்
பாசம் காட்டத் தெரிந்தவன்
கல்லூரிப் பக்கம் போகாதவன்-சிறுவயதிலேயே
கர்நாடக இசையைக் கற்றுப் புரிந்தவன்

 ஆடவர் ஆயிரம் ஆசையில் அலைகையில்
ஆர்மோனியப் பெட்டிக்குள் தன்னகிலத்தை அடக்கியவன்
ராமமூர்த்தியெனும் நல்நட்போடு கூடி
ஆயிரம் படங்களுக்கு நல்லிசை வழங்கியவன்

”நான்” எனும் ஆணவமில்லா
எங்கள் விசுவநாதன்
எம்.எஸ்.விசுவநாதன் ஆனான்
எங்கள் தமிழிசைக்கு நாதன் ஆனான்

தினமும் தேவாரம் கேட்பதே
தேனமுதம் என நம்பிய
எங்கள் பெற்றோர் காதிற்கு
பூபாள இசை கொடுத்தவன்

மங்கையர் காளையர் பருவக் குழப்பத்தை
நல்லிசையாலே காதலெனும் சுகமாக்கியவன்
மானுட வெறியை மனித மனங்களின் பிறழ்வை
இசையெனும் கோலால் சரியாக்கியவன்

கண்ணதாசனிடம் தமிழ்ச்சாறு
பிளிந்தெடுத்த எங்கள் விசுவநாதன்
கண்ணதாசனைக் காதலித்த
இறை தந்த எங்கள் இசைத் தூதன்

அவர் நெற்றியிலே தினமும்
பொட்டிருக்கும்
அந்தப் பொட்டினிலே
பல மெட்டிருக்கும்

முக்குறியாய் விபூதிப் பூச்சிருக்கும்
முக்கியமாய் அங்கே இசைப் பேச்சிருக்கும்
முகமெல்லாம் இசைக்கோட்டின் தழும்பிருக்கும்
முத்தமிழும் அங்கே பாட்டாய் குடியிருக்கும்

மெல்லிசை மன்னர்
எங்கள் இசைக்கு அவரே அண்ணர்
பலபல வித்தகர் வந்தனர் பின்னர்-இருப்பினும்
இசையுலகில் என்றும் அவரே வின்னர்

இசைக்கு என்றும் இளையராஜா என
ஏற்போரும் உண்டு
இளையராஜாக்களை உருவாக்கிய பழையராஜா என
இசைப்போர்தான் ஏராளம் உண்டு

நல்வாழ்க்கை வாழ்ந்து அமரத்துவம் அடைந்த இசை வேந்தர், மெல்லிசை மன்னரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்

நன்றி.

அ.பகீரதன்

ஆடிக்கலவரம்-முள்ளிவாய்க்கால்



வாய்க்கரிசி கூட வாய்க்காமல்
போனதடா தமிழா
வாய்த்த பெருவரமும் கைநழுவிப்
போனதடா தமிழா

கொள்ளி வைக்க பிள்ளை இல்லையென
சொல்லிச் சொல்லி தள்ளி வைத்தோமடா  
கொள்ளிகூட இல்லாமல் இன்று
கொத்துக் கொத்தாய் வீழ்ந்தோமடா

வாய்க் கொழுப்பும் வசைபாடும் நம்மியல்பும்
மொத்தமாய் நம்தேசத்தை முழுங்கித் திண்டதடா
நெல்லாக முன்பே அஞ்சாமல் கஞ்சிக்கு முண்டியடித்தோமடா
 பழஞ்சோறும் மிஞ்சாமல் பானை உடைந்ததடா

கோடி சொத்தும் கொழும்பான் எனும் மிடுக்கும்
ஆடியிலே வீழ்ந்ததடா நம்மை ஆட்டிவைக்க முனைந்ததடா
ஆடிக்கூழ் மறைந்து ஆடிக்கலவரமே மனதில் படிந்ததடா
அடித்தவன் கைகளை ஒடிந்தான் தமிழனெனும் புகழ் நிலைத்ததடா

விதித்தவன் பிழையோ விதைத்தவன் பிழையோ
விடியலுக்கு முன்பே வீழ்ந்து தொலைந்தோமடா
முள்ளிவாய்க்கால் எனும் நரகத்தை கண்டோமடா
முள்ளந்தண்டில்லா ஓர் உருவமாய் குனிந்தோமடா

பிழைப்பு அரசியலோ பிழையான அரசியலோ
இழவு அரசியலோ இயலாமை அரசியலோ
மக்களை நேசிக்கா மாபெரும் கட்சியாய் இருந்தென்ன பயன்
மானத்தை விற்று அரசியல் மடியை நிரப்பி என்ன பலன்

கொள்ளி விழுந்த வீட்டில் சுள்ளி பிறக்குவதோ
பள்ளிக் குழந்தையின் உண்டியலை உடைப்பதுவோ
பிணத்தின் வாடையிலே அரசியல் சுவாசமோ
பெற்றெடுத்த தாயவளை மறந்து மலிவு அரசியலோ

சாவை அர்த்தமாக்கிஅரசியல் புரட்சி செய்யடா தமிழா
தேவைசார் அரசியல் தவிர்த்து சேவை அரசியல் செய்யடா தமிழா
சாவால் இணைந்தவன் தமிழனென சரித்திரம் பறைசாற்றும் தமிழா-எந்தச்
சவாலையும் ஏற்றுத் தாழ்விலும் உயர்வானென உனைச் சந்ததி போற்றும் தமிழா

நட்புடன்,

அ.பகீரதன்

Tuesday, June 23, 2015

தமிழ் வானம் இன்று இருளால் சூழ்ந்ததோ? (புலவரின் மறைவு புலத்தில் ஓர் பேரிழப்பு)



புலரும் சூரியனிற்காய்
காத்திருக்கும் செடிகள் போல்
புலவர் வரவிற்காய்
காத்திருக்கும் அறிஞர்குழாம்

காளான்கள் நிமிர்ந்து
குடையாய் விரியும்போது
தாமரையொன்று தடாகத்தில் தலைமறைப்பதுபோல்
தன்னடகத்திற்கு பெயர் போனவர் எங்கள் புலவர்

அறிவுஜீவிகள் அடிக்கடி
நெற்றிக்கண் திறப்பார்கள்
எங்கள் புலவர் ஐயா
கைபற்றி அன்புக்கண் மட்டுமே திறப்பார்


சிலமேடைகள் கண்டதும்
பேச்சாளனெனப் பீத்தும் என்போன்றவர்க்கு
பாடையிலே போகும்வரை
பலமேடைகள் கண்டும் பண்பகலாப் பகலவன்

தள்ளாடும் வயதில்
எல்லோருக்கும் பல்லாடும்
எங்கள் புலவருக்கு மட்டும்தான்
இலக்கியச் சொல்லாடும்

எல்லோர் இதயத்திலும்
ஒட்டிக்கொண்டு ஒரு காதல் இருக்கும்
எங்கள் புலவரின் இதயத்தில்
முட்டிக்கொண்டு தமிழ் இருக்கும்

மனைவிமேல் தீராக்காதல்
எங்கள் புலவருக்கு
புலவர்மேல் தீராக்காதல்
எங்கள் பைந்தமிழுக்கு

அவருக்கு இரு பெண்பிள்ளைகள்
என எல்லோருக்கும் தெரியும்
இன்னும் இரண்டு பிள்ளைகள்
உண்டென யாருக்குத் தெரியும்

சைவமும் தமிழும்
அவருக்கு இரண்டும் பிள்ளைகள்
அவர் வளர்த்த பிள்ளைகள்
அவரை வளர்த்த பிள்ளைகள்

தேசிய விருது வாங்கவில்லை
தேசமெல்லாம் விருது வாங்கியவர்
ஆசிய மகான் குன்றக்குடிகளோடு
பலமேடைகளில் பேரொளி வீசியவர்

ஈழத்துப் புலவர் என உலகறியும்
ஈழத்துச் சிவாஜியென யாமறிவோம்

நோயில் கிடந்தபோதும் வாயில் வந்ததெல்லாம்
தமிழ்த் தாயின் கொஞ்சுதல்தான்
தானிறந்தால் தன்தமிழும்
இறந்திடுமோ எனும் நெஞ்சுரசல்தான்

சூழ்ச்சி வஞ்சகம் புறஞ்சொல் கடுஞ்சொல்
கள்ளு காமம் களியாட்டம் மாமிசம்
ஏதுமறியா எங்கள் தமிழ் புலவன்
புங்கைக்கு புகழொளி தந்த நிலவன்

கண்ணீர் துளிகளுடன்,
அ.பகீரதன்


(மைத்துனர் சித்ராமணாளன், எஸ்.கே மகேந்திரன் அண்ணா போன்றவர்களுடன் பழகிக் களிப்புற முடியாமல் போன நாட்களையெல்லாம் உங்களோடு பழகிக் களிப்புற்றேன். உங்களை நேசித்த நாட்களும் விமர்சித்த நாட்களும் நெஞ்சில் நிழலாடுகின்றது. இதயம் எவ்வளவு பலவீனமானது என்பதும் மரணம் கொடுமையானது என்பதும் மீண்டும் உணர்த்தப்படுகிறது.மீண்டும் பிறந்து வா எங்கள் தமிழ்ப் பெருங்கடலே, புங்கை மண்ணிலே மீண்டும் தமிழாய் எழுந்துவா)

Saturday, June 20, 2015

பண்பாடு இன்று படும்பாடு



பண்பாடு பண்பாடு
நம்பண்பாடு படும்பாடு
வலியோடு அதைப்பாடு
பயன்பாடு பற்றி பண்போடு பண்பாடு

உன்பாடு என்பாடு
நம்பாடு பெரும்பாடு நாய் படாப்பாடு
நம்பண்பாடு நல்ல தமிழ்ப் பண்பாடு
தெம்போடு தினவோடு தினம்தேடு

நம்நாடு தமிழ்நாடு நல்தாய்த் திருநாடு
வெளிநாடு வலுநாடு பெருநாடு
இருந்தும் குளிர்நாடு அது பிறர்நாடு
அது நமக்கு வெறும்கூடு

பண்பாடு பண்டைத் தமிழ்ப் பண்பாடு
இன்று படும்பாடு எல்லோர்க்கும் கண்கூடு
இதற்கு அன்போடு பண்போடு தடைபோடு
இல்லேல் நீ கூனோடு குருடோடு நடைபோடு

தமிழோடு தமிழிசையோடு தனிப்படையோடு
தவிலோடு குறளோடு தக்கவிசையோடு பக்கபலத்தோடு நீயோடு
திமிரோடு தமிழ்த் திமிரோடு நீபோராடு
இல்லேல் உன்பணக்காரப்பிள்ளை ஏந்தும் திருவோடு

(திருவோடு=பிச்சை கேட்கும் பாத்திரம்=கபாலம்)

நன்றி

அ.பகீரதன்

Wednesday, June 17, 2015

அன்னைத் தமிழை யார் மறப்பார்?


ஆதிசிவன் அகத்தியருக்களித்த
ஆதித் தமிழ் அது நம்
அன்னைத் தமிழ்

மூத்தகுடியாம் நம்மூத்தோர் பறைஞ்ச
முன்னைத் தமிழ்

அகிலாண்ட மாமன்னர் பேசிய எங்கள்
சென்னைத் தமிழ்

கம்பநடை மாற்றி கவித்தாயைப் போற்றி கண்ணதாசன் தந்த
பின்னைத் தமிழ்

பிரபா எனும் பெருந்தலை சுதுமலையில் மொழிந்த
‘அண்ணை’த் தமிழ்

குந்திலே உரசி உரசி நம்அம்மாக்கள் ஊர்க்கதை பேசிய
திண்ணைத் தமிழ்

கள்ளுண்ட போதையிலே அப்பாக்கள் வம்பளந்து மகிழ்ந்த
தென்னைத் தமிழ்

கைலாசபிள்ளை சிவத்தம்பி எஸ்.பொ எனும் பிரமாக்கள் வரைந்த
வண்ணைத் தமிழ்

ஏழையின் இழவு வீட்டிலே வட்டிக்கார கனகர் கதையளந்த
பண்ணைத் தமிழ்

காமக் குசியேறி பட்டணத்து மாமிமகள்  வழுக்கி விழுத்திய
கொன்னைத் தமிழ்

(கவிதை எழுதுபவர்களின் கவனத்திற்கு: எதுகை மோனைக்காக சொற்களை வலிந்து இழுத்து போடுதல் கவிதையை பலவீனப்படுத்தும் என்பதை அறிக. இங்கே நான் அதைச் செய்திருக்கிறேன், ஆதலால் சுட்டிக்காட்டியுள்ளேன்)

ஆக்கம் 
அ.பகீரதன்




Tuesday, May 26, 2015

வித்தியா இன்றி ஊரே விரக்தியாய்

வித்தியா வீழ்ந்த இடத்தில்
சத்தியம் செய்து கொள் மனிதா
இனியொரு முறை இப்படி
மனிதம் சாகாதென!

வெள்ளிக் கொலுசோடு
துள்ளித் திரிந்த மங்கையை
கொள்ளிக்கு இரையாக்கும்
கொடூரம் ஏன் நடந்ததுவோ?

படலை வரை வந்து
பள்ளிக்கு அனுப்பிய தாய்
சுடலை வரை உனைக்காவும்
சோகம் நமக்கெதுவோ?

வித்தியா வீழ்ந்த இடத்தில்
சத்தியம் செய்து கொள் மனிதா
இனியொரு முறை இப்படி
மனிதம் சாகாதென

பெண்களைப் போற்றிடும்
புங்கை மண்ணிலா
எங்கள் தங்கை
கருகிடும் கொடூரம் நிகழ்ந்தது?

வறண்ட தேசத்திலும் வற்றாத நீராய்
எங்கள் இதயமிருக்கையில்
இரக்கமில்லா கொடிய காமுகராய்
இன்னும் சிலர் எங்கள் பூமியில் இருந்தனரோ?

மச்சாளோடும் தங்கையாய் பழகிடும்
எங்கள் கிராமத்தின் அழகில்
வன்புணர்வெனும் அழுக்கு படர்ந்ததோ
அது உலகமெலாம் நமை தலைகுனிய வைத்ததுவோ?

வித்தியா வீழ்ந்த இடத்தில்
சத்தியம் செய்து கொள் மனிதா
இனியொரு முறை இப்படி
மனிதம் சாகாதென

கண்ணகைத் தாயே-உந்தன்
கண்களைக் கட்டியா
எங்கள் கண்ணகி
சிதைந்திடும் காட்சியைப் பொறுத்தாய்?

ஊர் ஊராய் அலைந்த போதும்
போரினால் நிலைகுலைந்தபோதும்
எம்தங்கையரை நீயே காப்பாற்றினாய்
ஏன் உந்தன் வாசலில் இப்படியொரு கொடூரம்?

கடல் தாண்டி கண்டம் தாண்டி வந்து
முத்தேரில் உனை வைத்து இழுத்து
அழகு பார்தத உந்தன் அடியவரின்
அடிவயிறு பற்றி எரியுதம்மா! தீர்ப்புச் சொல்!

கொலைவெறியரின் கழுத்துக்கு
உந்தன் மாலை தூக்காகட்டும்
கொலைவெறியரை காப்பாற்ற வந்த
கயவரின் புகழ் காற்றோடு போகட்டும்!

வித்தியா வீழ்ந்த இடத்தில்
சத்தியம் செய்து கொள் மனிதா
இனியொரு முறை இப்படி
மனிதம் சாகாதென

வித்யாவின் ஆன்மா சாந்தியடையட்டும்.


அ.பகீரதன்

Tuesday, April 21, 2015

வயது நாற்பது



வயது நாற்பது?

அகவை நாற்பதா
ஆகா என ஆனந்தப்படு
ஆயுளின் பாதியைக் கடந்தாய் நன்று

அகவை நாற்பதில்….

வரவறிந்து செலவுசெய்
வயிரறிந்து உணவுகொள்

ருசிக்கு உண்ணாதே பசிக்கு உண்
கீரை மீன்வகை தாது சேர்
கொழுப்பு மா கிழங்கு தவிர்
தொப்பை  தொப்பி தவிர்

நீரழிவு அது பேரழிவு
உயர்கொழுப்பு அது உன் உயிர்குடிப்பு

நீரழிவு நின்று கொல்லும்
அதிகொழுப்பு அன்றே கொல்லும்
இரண்டையும் தள்ளி வை
இன்றே கொள்ளி வை

ஏழு மணிநேரம் தூங்கு
அரைமணிநேரம் நட
கால்மணி நேரம் வாசி
காலரை மணி நேரம் ஒரு நாசியால் சுவாசி

காமப்பசிக்கு
வீட்டில் விருந்தாக்கு
வெளியில் மருந்தாக்கு

மனைவியை(கணவனை) மீண்டும் காதலிக்கத் தொடங்கு
முடியாவிட்டால் காதலிப்பதாய் நடி
தாயை மனதிலாவது வழிபடத் தொடங்கு

புகைத்தலை விடு
உடலுக்கு நல்லது
புகைச்சலை விடு
மனசுக்கு நல்லது

சேமிப்பாளனாய் இருந்தால்
கொஞ்சம் செலவழி
செலவாழியாய் இருந்தால்
கொஞ்சம் சேமி

தேவையறிந்து சேவை செய்
உன் தேவைக்காக சேவை செய்யாதே

புகழ் பணம் தேடி
பொது வாழ்விற்கு வராதே
இரண்டையும் பொதுவாழ்வில் இழக்காதே

விமர்சனத்தை காதிற்குள் மடு
விசனத்தை காற்றோடு விடு

முதியவரை வழிபடு
இளையவருக்கு வழிவிடு

மாற்றோர் கருத்தையும் ஏற்கப் பழகு
மாற்றான் மனையுடன் தங்கையாய் ஒழகு

மன உழைச்சல் அது
தின உழைச்சல்
தாழ்வுச்சிக்கல் அது
வாழ்வுச்சிக்கல்
உடைத்துக்கொண்டு வெளியே வா

கோளுக்குப் பயந்து கோயிலுக்குப் போகாதே
கோயிலுக்குப் போனால் கோளை மறவாதே

வளர்த்துவிட்ட சமூகத்திற்கு
சேர்த்துக் கொடு முடிந்தால் வார்த்துக் கொடு

தகுதியில்லாதவற்றில் தள்ளிநில்
தகுதியுள்ளவற்றில் உறுதியாய்நில்
புலமையை ஆற்றுப்படுத்து
புலியே எதிர்த்தாலும் அதை வெளிப்படுத்து

தீயிலே வீழ்ந்தால் ஜோதியாய் எழு
நீரிலே வீழ்ந்தால் மீனாயிரு

சும்மா கனவு காணாதே
காலத்தை கரைத்திடும்
எதையாவது தொடங்கு
அழுங்குப்பிடியாய் இயங்கு

பிறப்பை சூழலை துணையை
குறை சொல்லாதே தடையாய் நினையாதே

 உழைப்பை விதை
வியர்வையை பாய்ச்சு
அறுவடையை ஆறுபடையிடம் விடு

வலிக்கும்வரை ஓடு
வலித்தால் நட
விழுந்தால்  மீண்டும்
தவழ் எழு நட ஓடு

வெற்றி பெறும்வரை
வெறியாய் இரு அதில் குறியாய் இரு
பெற்றபின்  அதற்கு நெறியாய் இரு

நீ ஈழத்தமிழனா ?
நாயகனாய் இரு
கமலஹாசனாய் இராதே

நன்றி
அன்புடன்,

அ.பகீரதன்

Friday, September 26, 2014

அணையாத தீபம்.


 

 

சிங்கத்திடம் சிக்காத எங்கள் தங்கம்

வங்கத்தின் நச்சுவாயில் வீழ்ந்ததுவே

கட்டுவனில் குண்டுபட்டும் குலையா அவனுடல்

சொட்டுத்தண்ணி அருந்தாமல் துடித்து வீழ்ந்ததுவே

 

ஊர்கூடித் தேரிழுத்த வீதியிலே

ஊர்கூடி ஓலமிட வந்ததுவே

கந்தனை சுற்றிவந்த கூட்டமெல்லாம்

சிந்தனை மறந்து மைந்தனைச் சுற்றி நின்றதல்லோ

 

உடலுருகிச் சுருங்கினாலும் உள்ளம் உறுதிபெற

கடல்பெருகிக் கந்தனடி சேர்ந்ததுபோல்

அலை அலையாய் அறந்தமிழர் அங்குகூடி

இளந்தமிழன் இன்னுயிரை இறைகாக்க வேண்டினரே

 

அடுத்தகட்டம் என்னவென்று அனைவரும் விழித்தபோது

அண்ணல்வழியே துணைவழியென்று விழித்தவனே

வஞ்சகக் கிருஸ்ணனின் வாரிசுகள் வஞ்சிப்பார் என்றறிந்தும்

துஞ்சாமல் களம்புகுந்து அண்டைய நாட்டின் முகத்திரையை கிழித்தவனே

 

உண்ணாமல் நீகிடந்த வீதியினை

எண்ணாமல் இருக்க முடியலயே

அண்ணா அண்ணாவென அழுத முகங்கள் எல்லாம்

கண்முன்னால் வந்துநிற்க நெஞ்சுகலங்கிறதே

 

பார்த்தீபா! பார்த்தீபா

பார்த்தாயா? எங்களினம் படும்பாட்டை

என்ன சொல்ல? என்ன சொல்ல?

என்னினத்தின் நிலைதனை என்னசொல்ல?

 

புத்தி கெட்ட பிக்குவெல்லாம்

புத்தர் பெயர்சொல்லி பிழைக்கிறான்

கத்தியும் கள்ளப் புத்தியுமாய்

வட கிழக்கை கிழிக்கிறான்

 

கொப்பிழந்த குரங்குபோல

தமிழன் தாவித்தாவி தவிக்கிறான்

தனதுவளம் தமிழர்நிலம் மறந்துபோய்

தார்வீதி கண்டு மலைக்கிறான்

 

என்ன சொல்ல? என்ன சொல்ல?

என்னினத்தின் ஈனத்தினை என்னசொல்ல

நடந்ததெல்லாம் சொல்ல நாலைந்து பக்கம்வேணும்

சொல்லச்சொல்ல நம்மானம்தான் கெட்டுப்போகும்

 

தியாகங்களை மறக்காதே தமிழா!!

 

நன்றி.

அ.பகீரதன்